என் முதல் கதையும்.. நட்பும்..

என் முதல் கதை ‘காக்கா பையன்’. எட்டாம் வகுப்பு படிக்கும்போது எழுதினேன் என்று நினைக்கிறேன். என் தம்பி அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். என் நண்பன் புகழேந்தியும் நானும் அந்தக் கதையை எழுதினோம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதன் அவசியத்தைப் பற்றி அந்த வயதிலேயே நாங்கள் எழுதிய குறுங்கதை. பிறகு அதை நாடகமாகவும் எழுதி நாங்களே அதை டேப் ரிகார்டரில்பதிவு செய்து நண்பர்களுக்கு போட்டுக் காட்டலாம் என்று முடிவு செய்தோம்.

கதையில் மொத்தம் நான்கைந்து பாத்திரங்கள் என்று நினைக்கிறேன். காட்சி நடப்பது ஒரு தேநீர் கடையில். தேநீர் கடைக்காரர் அவரது மகன் ‘காக்காய்’ பற்றி வாடிக்கையாளர் நண்பரிடம் புலம்பும் பாத்திரம். (பையனுக்கு ஆட்டிசம் போன்ற ஏதோ ஒரு பிரச்சினை. ஆட்டிசம் பற்றியெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது) புகழேந்தி நண்பர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டான். நானே மீதி மூன்று பாத்திரங்களை ஏற்று வெவ்வேறு குரலில் பேசி அந்த நாடகத்தைப் பதிவு செய்தோம். என் தம்பிக்கு இது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு அந்த நாளை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. அதே சமயம், அவசர நண்பர்கள் வாழும் உலகில் ஆத்ம நண்பர்களைப் பற்றி நினைப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.

என்னமாதிரியான ஒரு நண்பன் புகழேந்தி? எப்போதுமே புன்னகையை ஏந்திக்கொண்டிருக்கும் வெகுளித்தனமான முகம், அதே சமயம் என்மேல் கைவத்த காரணத்திற்காக எங்களைவிட வயதில் மூத்தவரையே கிரிக்கெட் பேட்டைக் கொண்டு அடிக்கச் சென்ற தைரியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். புகழேந்தி அருமையாக கிரிக்கெட் விளையாடுவான். தீவிர ரஜினி ரசிகன். எஜமான் படம் பார்த்துவிட்டு, அதேபோன்றதொரு வெள்ளைச் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு, துண்டை சுற்றிக் கொண்டு திரிந்தவன்.

இப்போது எங்கு இருக்கிறானோ தெரியவில்லை? என் இதயத்துக்கு நெருக்கமானவர்கள் யாரும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலோ, இணையத்திலோ எளிதில் கிடைப்பது இல்லை; இல்லவும் இல்லை!

கருத்துகள்

  1. விரைவில் உங்கள் நட்பு மீண்டும் துளிர்க்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்தைக் கொண்ட கதையை சிறுவயதிலேயே எழுதியதற்கு பாராட்டு கூறி உங்கள் நண்பருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..