சுருட்டிக்கொள்ளாத வால்
(குறுங்கதை) அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன். நல்ல நாய்தான். ஆனால், அந்த வால்? அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன். ஆனால், அந்த வால்? அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் தருகிறேன்’ என்றேன்