சில வரங்களுக்காக..

பிறருக்காக நாம் முடிவெடுக்க நேரிடும் தருணங்கள் கத்தி முனையில் நடப்பது போன்றது; அபாயகரமானது. ஆயினும் நண்பர்களின் நலன் கருதி, அவர்களுக்காக நான் எடுத்த முடிவுகள் சில தவறாக முடிந்திருக்கிறது. ஒரு சிலருக்கு உண்மையான நோக்கத்தோடு உதவி செய்ய விழைந்து, அதில் மற்ற நண்பர்களையும் ஈடுபடுத்தி, பிறகு அந்த முடிவுகள் ஏற்படுத்திய பாதகங்களால் அவர்களது நட்பையும் இழந்து, இருபுறங்களிலிருந்தும் சாபங்களைப் பெற்று, பெரும் சிக்கல்களில் என்னை புகுத்திக்கொண்டு மனதை ரணப்படுத்திக்கொண்ட தருணங்கள் பல.
ஒரு மலரின் அழகை ரசித்து விட்டு, வாசத்தை நுகர்ந்து களிப்புற்று, பின்பு அதைப் பறித்து தலையில் வைத்துக்கொள்ளும்போது சிறு முள் குத்தியது என்பதற்காக, எப்படி அந்த மலரை கசக்கி நசுக்கி வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
இதுபோன்ற நல்லாத்மாக்கள் ஒவ்வொருமுறையும் கண்டும் காணாதவாறு வெறுப்புடன் கடந்து போகும்போதும், மறைந்திருந்து தாக்கும்போதும் என் தந்தையின் நாட்குறிப்பில் ஒருமுறை நான் படித்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்:

"என் சிறகுகள் முறிக்கப்படுகின்றன
என் எதிரிகளால் அல்ல
என் மென்மையான சிறகுகளின்
வெம்மையில் வளர்க்கப்பட்டவர்களால்.."

நமக்கெதற்கு இந்த வம்பெல்லாம்? இனிமேல் யாருக்கும் வேண்டிச்சென்று உதவி புரியக் கூடாது என்று சமயங்களில் தோன்றும். ஆயினும் மற்றவர்களுக்கான என் முடிவுகள் பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கிறது. என் செயல்கள் பலமுறை நன்மையிலேயே முடிந்திருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மகிழ்ச்சியோடு நம் கைகளைப் பற்றி 'நன்றி!' என்றும், 'நீங்கள் அப்போது குறுக்கிடாமல் இருந்தால்..' என்றும், 'அதை என்னால் மறக்கவே முடியாது' என்றெல்லாம் கூறி வாழ்த்தும்போதெல்லாம் காயம் பட்ட இடங்களில் மயிலிறகால் வருடுவது போல் உணர்கிறேன்.
இப்படி மயிலிறகேந்தி ஓடிவந்து வருடி அன்பு வீசும் நண்பர்கள் இருக்கும் வரை, வில்லேந்தி மறைந்து நின்று அம்பு வீசித் தாக்கும் அன்பர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
சில வரங்களுக்காக சில சாபங்களை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..