ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு

ன்பு ஜெயமோகன், 

அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள். 

"ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு"

ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.   

அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.  

அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இதில் அவர்களுடைய முடிவைப் பற்றியும், ரப்பர் தோட்டத்துக்குள் தடயமற்றுப் புதைந்து போன தந்தையாரின் வீட்டைப் பற்றியும் சொல்லும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது சற்று உணர்ச்சிவசப்பட்டேன். கட்டிலின் மீதமர்ந்து அவர் அஜிதனுடன் உரையாடும் காட்சிகளைப் பார்த்தவுடன் ஏனோ எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. நானும் என் தந்தையும் அருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அதிலும் தன் மகனிடம் அவன் அன்னைக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி பேசும் இடம் கொள்ளை அழகு. வருங்காலத்தில் என் மகனுக்கு அவன் அன்னையுடனான என் காதலைப் பற்றி சொல்லும் பொழுது அவன் இவ்விதமே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும். 

அவர் சிந்திக்கும், வாசிக்கும் காட்சிகள் நெருக்கத்திலிருந்தும், நடந்து செல்வது போன்ற காட்சிகள் தூரத்திலிருந்தும் அழகாக பதிவு செய்யப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் மீது அமர்ந்து ரஷ்யாவின் பனிப்பொழிவை கற்பனை செய்தபடி ரஷ்ய இலக்கியங்களை வாசித்தது பற்றி கூறிய இடம் என்னுடைய சிறுவயது நினைவுகளைக் கிளறியது. இரண்டு நாட்களுக்கு முன்புக்கூட ஒரு குளிர்காலத்தில் இரவு வேளைகளில் கட்டிலின் மீதமர்ந்து மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது தேநீர் போட்டுக் கொடுக்கும் என்னுடைய தாயைப் பற்றி எழுதினேன். 

அழகான இயற்கைக் சூழல், நீர்நிலைகள், கோயில்களின் பின்னணியில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள், இடையிடையே செருகப்பட்டிருந்த பொருத்தமான புகைப்படங்கள், இலையுதிர் காலத்தைப் பற்றி பேசும் பொழுது அதற்குப் பொருத்தமாக  விழும் இலைகள் என்று பேச்சுக்குப் பொருத்தமான காட்சிகள்,  நாயுடன் கொஞ்சி விளையாடுவது, இப்படி  இயல்பான காட்சிகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம்.  

ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஹரிதம் இல்லத்தில் குறைந்த ஒளியில் தன்னுடைய இசைக்குறிப்புகளை சரிபார்க்கும் ஒரு அமைப்பாளராகத் தெரிந்தவர், அதன் இறுதிக் காட்சியில் அவர் தட்டச்சு செய்யும் இசைப்பின்னணியில் வேளிர் மலையின் மீது தீப்பற்றி எரியும் காட்சியைக் கண்டபோது, தன்னுடைய இசைக்குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பியானோ கலைஞராக எனக்குத் தெரிந்தார். 

பின்னணி இசை என்று எதுவும் சேர்க்காமல் விட்டதற்கு அஜிதனுக்கு நன்றி.   

ஜெயமோகனுக்கு இன்னும் நெருக்கத்தில் நான் இருப்பதாக என்னை உணர வைத்திருக்கிறது அஜிதன் தீட்டியிருக்கும் இந்த உயிரோவியம்.


அன்புடன், 
மாதவன் இளங்கோ 

நவம்பர் 3, 2016

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..