அம்மாவின் தேன்குழல் சிறுகதைத் தொகுப்பு - அகநாழிகை வெளியீடு

துகாறும் நான் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை 'அகநாழிகை பதிப்பகம்' வெளியிட இருக்கிறது. இந்த நற்செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான சிறுகதைகள் வல்லமை இதழில் வெளிவந்தவை. வல்லமை என் முகவரியின் முதல் வரி என்றால் அதில் துளியும் மிகையில்லை. சில சிறுகதைகள் சொல்வனம், திண்ணை மற்றும் சிறகு இதழ்களில் வெளியானவை. ஓரிரு கதைகள் பிரசுரமாகாதவை

உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணிவிடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள். எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகுவிரைவாக படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தைப்  வாசித்துக்கொண்டு இருக்கும் போதே பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அதன் பின்னால் கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பான கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் என் முன்னே வந்து கொட்டும். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அப்படியே சிந்தனையில் மூழ்கிப் போய்விடுவேன். இருந்தாலும் சிதறிவிழும் சிந்தனைகளைக் கோர்த்துப் பார்க்கலாம், கவிதையாகவோ,  கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ எழுதிப்பார்க்கலாம் என்றெல்லாம் எனக்குத் தோன்றியதில்லை. பெல்ஜியத்திற்கு புலம்பெயர்ந்த போது உருவான வெறுமை, தாயக நினைவுகள், புதிய அனுபவங்கள் இவையே என்னை எழுதத் தூண்டியது என்று நினைக்கிறேன். 

வல்லமையில் வெளிவந்த என்னுடைய 'அம்மாவின் தேன்குழல்'  சிறுகதையை சிறந்த சிறுகதையாக, திரு. வெ. சா ஐயா அவர்கள் தேர்ந்தெடுத்து விமர்சிக்காதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே. என்னை எனக்கே அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். என் முகவரியின் இரண்டாம் வரி அவர். 

திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், வல்லமை இதழும், ஐக்கியா அறக்கட்டளையும் சேர்ந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவை அறிவித்து, போட்டியில் வென்ற எட்டு சிறுகதை ஆசிரியர்களையும் பாராட்டி, அவர்கள் அனைவரின் தனித்தொகுப்புக்காக காத்திருப்பேன் என்றார்.   

என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் என்றெல்லாம் நான் கனவு கூட கண்டதில்லை. அகநாழிகை பதிப்பகம் சகோதரர் பொன்.வாசுதேவன் அவர்களால்தான் இது சாத்தியமானது. அவருக்கு என் மிகப்பெரிய நன்றி. அகநாழிகை என் முகவரியின் அடுத்த வரி! 

அதன் பிறகு வல்லமையின் ஆசிரியர் பவளசங்கரி மற்றும் சொல்வனம் பதிப்பாசிரியர் குழுவிலுள்ள நடராஜன் பாஸ்கரன் அவர்களைப் போன்ற  நலவிரும்பிகள், நண்பர்கள், உறவுகள், என் தளத்தின் வாசகர்களாகிய உங்கள் அனைவரின் தொடர்ந்த ஊக்குவிப்பும், நீங்கள் தந்த உற்சாகமும் என்னை இதுவரை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றிச்செண்டு!!  

புத்தக வெளியீட்டு விழா - என் சொந்த ஊரான திருப்பத்தூர் நகரில் ஜனவரி மாதம் நான்காம் நாளன்று நடைபெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டால் பேருவகை அடைவேன். புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழையும், புத்தக முன்னுரையையும் இன்னும் சில தினங்களில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  

அம்மாவின் தேன்குழல் புத்தக அட்டை:



'அம்மாவின் தேன்குழல்' முகநூல் பக்கம்:


https://www.facebook.com/AmmavinThenkuzhal






அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் குறித்த அறிவிப்பு:



இணையம் வழியாக புத்தகம் வாங்க..

கருத்துகள்

  1. மாதவன் .. தங்களின் சிறு படைப்புகள் , பெரும்படைப்புகள் ஆவதில் நாங்களும் பேருஉவகை கொள்கிறோம் .. மிக்க மகிழ்வு .. எழுத்துலகில் எல்லோரும் ஏகலைவர்கள் ஏகலைவர்கள் தாம்.கூத்துபட்டறை போல எழுத்து பட்டறை எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை .. தங்களின் துரோணர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் . எங்களை போலவே அவர்களும் உவகை கொள்ளட்டும்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள்... தொடர்ந்து பல புத்தங்கள் வெளிவர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மாதவன் சார்...

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..