தோப்பில் முகம்மது மீரான்
சமீபத்திய பதிவொன்றில் இவ்வாறு எழுதியிருந்தேன். • தமிழக இஸ்லாமிய சமூகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்வியலைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பிரியாணியைத் தவிர! எத்தனைப் படங்கள் அவர்களின் வாழ்க்கையை நேர்மையாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தால் அவற்றிலும் மிகையாக “அல்லா-அருணாசலா" போன்ற செயற்கைக் காட்சியமைப்புகள். சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களுக்கு ஒரு முஸ்லீம் பெரியவர் குடிதண்ணீர் வழங்குகிறார். அந்தப் புகைப்படத்தை புளகாங்கிதத்துடன், "முஸ்லீம் பெரியவரே தண்ணீர் கொடுக்கிறார்" என்று ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த "ரே"-வில் ஒளிந்திருக்கிறது சமூகத்தின் குரூரம். இதில் என்ன விந்தை இருக்கிறது. அவரும் நம்மில் ஒருவர்தானே என்கிற கேள்விதான் எனக்குள் எழுந்தது. ஆனால் அவரை அவ்வாறு இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை இந்தச் சமூகம். அதற்குப் படைப்பாளிகளின் பங்கு என்ன? மலையாளத்தில் வெளிவந்த "ஆதாமிண்டே மகன் அபு" (மற்றும் எத்தனையோ) படத்தைப் போன்று ஒன்று வந்திருக்கிறதா தமிழில்? அது சரி.