குழந்தைகளால் நிரப்புக..

ன் மகனுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்களும் பெல்ஜியர்களும்தான். அவனுடைய உற்ற நண்பர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் பாகிஸ்தானியர்களே. அதிலும் அவன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் - 'ஹசன்'. அவனும் பாகிஸ்தானியனே.
பெல்ஜியத்தில் பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அதுவும் அரைமணிநேரம் மட்டுமே மதக்கல்வி போதிக்கப்படுகிறது. கிறித்தவம், இஸ்லாம் என்று எதை வேண்டுமானாலும் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மதக்கல்வி விரும்பாதவர்கள் 'நல்லொழுக்க வகுப்பைத்' தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என் மகன் நல்லொழுக்க வகுப்புக்குத்தான் செல்கிறான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹசன் இவனிடம், 'நீ ஏன் நல்லொழுக்க வகுப்புக்குச் செல்கிறாய். உன் நாட்டில் கடவுளே கிடையாதா?' என்று கேட்டிருக்கிறான். அதற்கு என் மகன், 'என் நாட்டில் நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடவுள்களைப் பற்றியெல்லாம் நம் பள்ளியில் சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். அதனால்தான் நான் நல்லொழுக்கம் படிக்கிறேன்' என்று கூறியிருக்கிறான். அதற்கு ஹசன் இவனிடம், 'அப்படியானால் நாம் போய் ஆசிரியரிடம் பேசி உன்னுடைய கடவுளையும் இங்கே கொண்டு வரவேண்டும். இது சரியில்லை.' என்றானாம். அதற்கு இவனும் தலையாட்டி பாராட்டிவிட்டு வந்திருக்கிறான். பிறகு நல்லொழுக்கம் எப்படி கடவுள் கல்வியை விட முக்கியம் என்று பாடம் எடுக்கவேண்டியதாய்ப் போய்விட்டது.
இந்தப் பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று என் மகனுக்கும் மனைவிக்கும் நிகழ்ந்த உரையாடலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தாய்: உனக்கெதிரே இரண்டு பேர் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டுள்ளார்கள். ஒருவன் 'ஹசன்', உன்னுடைய பாகிஸ்தானிய நண்பன். இன்னொருவன் நீ இதுவரை பார்த்திராத ஒரு சிறுவன். நீ யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'ரெண்டு போரையும் காப்பாத்துவேன்' (அவன் மொழியில்..)
தாய்: அது முடியாது. யாராவது ஒருவரை மற்றும் காப்பாற்ற முடியும் என்றால் யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'ஹசனைத்தான் காப்பாத்துவேன் அம்மி'
தாய்: சரி. அதில் ஒருவன் ஹசன். மற்றொருவன் ஒரு இந்தியச் சிறுவன். அப்போது நீ யாரைக் காப்பாற்றுவாய்?
மகன்: 'என்ன அம்மி இதுல டவுட். அப்பயும் ஹசனைத்தான் காப்பாத்துவேன்.'
தாய்: ஏன்?
மகன்: 'ஏன்னா அவன் என் பிரெண்டு'
ஆஹா. இதுபோதும் எனக்கு. 'இன்னும்' களங்கப்படாத குழந்தை உள்ளம். மதம் புகுந்துவிட்டதைக் காணமுடிகிறது. இருந்தாலும் தேசியவாதம், இனவாதம், சாதியம் இதெல்லாம் இந்தக் குழந்தைக்குப் புரிய வாய்ப்பில்லை. புரிந்ததெல்லாம், தெரிந்ததெல்லாம், அறிந்ததெல்லாம் 'நட்பும் அன்பும்' மட்டுமே.
எனக்கு இப்போது குழந்தைகள் பெரியவர்களாகவும், பெரியவர்கள் சிறுமைகளால் நிரம்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.
இந்த உலகம் உய்வதற்கு ஒரே வழி அதைக் குழந்தைகளால் நிரப்புவது மட்டுமேயன்றி வேறில்லை. அப்படியே வளந்தவர்களின் வாய்களை இறுகக் கட்டி விட வேண்டும். மேற்கண்ட 'வாதங்களெல்லாம்' குழந்தைகளுக்குள் திணிக்கப்படாமல் இருக்க அது உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..