'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய "முடி" சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!

இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்: 

முடி” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது. 

முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்கள் மொழி நடை மிக வித்தியாசமானதாய் புலம்பெயர் இலக்கியங்களுகென்றேயான ஒரு சிறப்பும், உடன் தெளிவான நீரோட்டம் போன்ற ஒழுங்குடன் இருக்கிறது. 

கதைத்தொடர்ச்சி எங்கும் அறுபடவேயில்லை, இடை இடையே  கதைமாந்தர்கள் பலரை அறிந்து கொள்ளும் போதும் பணிச்சூழல் மாறுபாடுகளைக் குறிப்பிடும் போதும், flashback சொல்லப்படும் போதும், அலுவலகத்தின் hierarchy விவரிக்கப்படும் போதும், எங்கும் கதை jump ஆகி பல இடங்களுக்கு சென்று பின்னர் மூலக்கதைக்கு வராமல், ஒரு மரத்தின் தண்டிலிருந்து அதன் பல கிளைகளைப் பார்ப்பது போல மூலக்கதையுடன் ஒத்திசைந்து வரும் பல கிளைகளை தொந்தரவின்றி  வாசிக்கவும் பின் தொடரவும் முடிகிறது. தேர்ந்த எழுத்தாளரென்று தெரிகிறது. நிறைய எழுதுவீர்களா? முடிந்தால் அனுப்புங்கள்.

கதையில் மையமுடிச்சு மோகனின் தலைமுடி கொட்டும் பிரச்சினையைக் குறித்தே எனினும் கதையின் ஊடே அந்த நாட்டின் பல அம்சங்களை மேலொட்டமாக, எனினும் குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். கடினத்தன்மை கொண்ட தண்ணீர், உணவகங்கள்,  (அவற்றின் பெயரிலிருந்தே அவை இந்திய உணவகங்கள் என்று தெரிகிறது) தொடர்ந்து போனால் ஏற்படும் அதிக செலவுகள், புதன்கிழமைகளில் பள்ளி நேரங்கள், பெண்கள் அதற்கேற்ப அவர்கள் வேலை நேரத்தை மாற்றிக்கொள்ளுதல், மோகனின் அலுவலகத்தில் இருக்கும் பணி தொடர்பான சிரமங்கள், வசதிகள், சலுகைகள் (வீட்டில் இருந்தபடியும் கென்டில் இருந்தபடியும் வேலை செய்வது, உணவிற்கான food allowance, காப்பகங்களுக்கான பெருஞ்செலவுகள், ரெடிமிக்ஸிலும்  உறைஉணவிலும் ஓடும் வாழ்க்கை வண்டி, நீளமான நகரதின் பெயர், மலைமேல் அமைந்த இன்னோர் நகரம், அதற்கு செல்லும் தூரம், பார்ட் ஒரு இறை நம்பிக்கை இல்லாதவர்,  அதனாலேயே தேவாலயத்தில் சடங்குகள் நடக்கவில்லை என ஒரு சின்னஞ்சிறு கதையில் அயல்வாழ்வின் எத்தனை தகவல்களைச் சொல்லி இருக்கிறீர்கள்?

கதையின் மையப்பிரச்சனையாகிய முடி கொட்டுதல் படிக்க படிக்க எனக்கெ முடி கொட்டுவது போல மிகத் தீவிரமாக மனதில் பதிந்துவிட்டது. படிக்கும் போதே மனதில் நான் அதற்கான தேர்வுகளை யோசித்தவாறு  இருந்தேன், (மொட்டை அடிச்சுக்கலாமில்ல?, எர்வாமாட்டினுமா உதவலை செக்கில் ஆட்டின தேங்காயெண்ணை? இத்யாதி.,)

ஆங்காங்கே தென்படும் உங்களின் பகடிகளும் அருமை. கொன்றொழித்த வார இறுதிகள் எனும் வாக்கியதில் தென்படும் இழந்த வார இறுதிகளின் ஆவேசம், குதிரைவால் முடி என்பதில் தெரியும் ஆற்றாமை, மின் தூக்கியில் முப்புறமிருந்தும் காணக்கிடைக்கும் 300 சொட்டைகளின் தரிசனத்தில் தென்படும் இயலாமையும் வேதனையும், அய்யனார் சிலை போல மாறாமல் பிரம்மாண்டமாய் அதுவும் இளித்தபடி அமர்ந்திருக்கும் அசல், flash பிரச்சினை ஆகுமளவிற்கான பளபளக்கும் சொட்டை
// சர்வாதிகார மனப்பாங்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை  கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?// எனும் சுயவிளக்கத்தின் மூலம் தெரியப்படுத்தும் உயரதிகாரியின் குணாதிசயங்கள்.

'அமேசானின் எர்வாமாட்டினும், ஐம்பதிற்கும் மேலான செல்ஃபியும்', இந்தத் தலைப்பிலெயே இன்னுமொரு கதை எழுதலாம் போலிருக்கிறது. இப்படி அள்ளி வீசியிருக்கிறீர்கள். உங்களின் பகடிகளை மிக மிக இயல்பாக போகிற போக்கில்.
ரசித்துப் படித்தேன். எப்போதும் பதற்றமாகவும் தொட்டால் விரிஞ்சிக்கண்ணணாகவும் எரிச்சலூட்டுபவராகவுமே சித்தரிக்கப்பட்ட பார்ட், கதையின் இறுதியில்  அந்த குணங்களுகெல்லாம் கான்சரில் பாதிக்கப்பட்ட அழகிய மனைவியின் கணவராக காட்டப்படுகையில்  தோன்றும் அவர் மேலான வெறுப்பு எந்த தயக்கமும் இன்றி உடன் குற்ற உணார்வாகிறது நமக்கும் மோகனுக்கும்.

மோகனுக்கு உள்ளுரவும் அவர் மீது நன்றி உணர்வே மேலோங்கி இருந்திருக்கிறது. அதனால்தான் அவன் வேறு தளத்திற்கு மாறாமல் அங்கேயே இருந்திருக்கிறான். பெரும்பாலான இந்தியர்களை போலவே மோகனும் நடுநிலைமைஉள்ளவனாகவே இருக்கிறான். கஷ்டத்திலும் உதவிகளை மறக்காமல், வெளிப்படியாக கோபத்தயும் வெறுப்பையும்  காட்டமுடியாமல், அமோரைப் போல தப்பித்துக்கொள்ளாமல் இப்படி இந்தியனாக இருக்கிறான்.

பார்டின் மனைவி இறந்த செய்தி அறிந்தபின் மோகன் மனதில் அசைபோடும் விஷயங்கள் எல்லாமே நாம் அவனிடத்தில் இருந்தால் நிச்சயம் செய்திருக்கும் விஷயங்களே. அப்படியா? இப்படி இருக்குமா? அப்படியெல்லம் இருக்காது.. என்று மனக்குதிரையை தட்டி விடுவதெல்லாம் மிக உயிர்ப்புடன் சொல்லி இருக்கிறீர்கள்.

இறந்த பெண்னின் புகைப்படத்தைப் பார்த்து மோகன் நினைப்பதெல்லம் சாதாரணமாய் நாமெல்லாருமே துக்க வீட்டில் நினைப்பதுதான். ஆனால் அழுது சிவந்த கண்ணும் மூக்குமாய் மூன்று சின்னக்குழந்தைகள் அவரருகே நின்ற அந்த கணத்தில் நான் ஓடிப்போய் பார்ட்டைக்க்கட்டிக்கொண்டு கதறிவிட்டேன். ஒரு நொடியில் என் குற்ற உணர்வனைத்தும் மாளாத்துயரமாகியது
மோகனைக்கட்டிக்கொண்டு கதறி நடந்தவற்றிற்கெல்லாம் பார்ட் மன்னிப்பும் கேட்பது மிக நெகிழ்வான தருணம். அந்த பெண் கான்சரில் இற்ந்தாள் என்பதையும் சிகிழ்சையில் முடியனைத்தும் இழந்திருக்கிறாள் என்பதையும்சொல்லாமல் விட்டதும் கதையின் பலம்.

மோகனுக்கு இப்பொது தன் முடி இழப்பு எனும் கோடு, கான்சர் எனும் வலிமிகுந்த உயிரைப் பறிக்கிற உற்றவர்களை துயரப்படுத்துகிற ஒரு வியாதியாகிய பெரும் கோட்டின் முன்னாலான சின்னஞ்சிறு கோடாகிவிட்டது.

நல்ல கதை மாதவன். என்றும் நினைவில் இருக்கும் எனக்கு. ஜெயமோகன் அவர்கள் சில சமயம் கடுப்புடன், ”நான் 20 பக்கம் எழுதினால் விமர்சனம் 60 பக்கம் எழுதறாங்க..”  என்று சொல்வது போல, நீண்ட நெடும் விமர்சனமோ என்னவோ தெரியவில்லை. கதை மிக மிக அருமை மாதவன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..