உணவுமுறைத் தேர்வு முரண்பாடு : "குறைவே நிறைவு"

ழுத்தாளர் ஜெயமோகன் பேலியோ உணவுமுறைப் பற்றி எழுதியிருந்த கட்டுரைக்கு என்னுடைய கருத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நான் குறிப்பிட்டிருந்த இரத்தவகை உணவுமுறையைப் பற்றி நியாண்டர் செல்வன் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்து மீண்டும் நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அவருடைய தளத்தில் கடிதங்கள் பிரசுரிக்கப்படுவதில் இருக்கும் அனுகூலங்களில் ஒன்று இது. துறை வல்லுநர்களிடமே உடனடியாகத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய டின்னிட்டஸ் பிரச்சினையைப் பற்றி அவருக்குக் கடிதம் எழுதியபோதே இதை உணர்ந்திருக்கிறேன். யோகம், ஆயுர்வேதம், மருத்துவம் என்று பல்துறை வல்லுநர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்தது. டின்னிட்டஸ் பிரச்னையில் உழன்றுகொண்டிருக்கும் பல வாசகர்களிடமிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது. அவர்களில் பலருடன் இன்றளவும் தொடர்பிலிருக்கிறேன்; அவ்வப்போது நலம் விசாரித்தும் வருகிறேன். இந்தியாவில் வசித்து வரும் ருவாண்டா தேசத்துப் பெண்ணொருத்தி என்னை அண்ணனாகவே பார்க்கிறாள். இது டின்னிட்டஸ் வழி உறவு. இன்னும் இப்படி எத்தனையோ உறவுகள்.  

நியாண்டர் செல்வன் அவர்களை வல்லமை கூகுல் குழுமத்தில் இருந்தபோது செல்வனாக அறிவேன். அவருக்குக் கடிதம் எழுதுவதற்காக மின்னஞ்சலை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒருவேளை என்னுடைய அஞ்சல்பெட்டியிலேயே எனக்கு வந்த கடிதங்களில் எங்காவது இருக்குமா என்று தேடியபோதுதான் இதை அறிந்தேன். அவர் குறிப்பிட்டிருக்கும் பயனற்ற உணவுகளின் பட்டியலில் எனக்கும் உடன்பாடு  உண்டு. "எல்லா உணவுமுறைகளும் வேண்டாத உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதால், ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவது நல்லது" என்று திறந்த மனதுடன் அவர் கூறியிருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. வழக்கமாக குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் அடிப்படைவாதிகளைப் போன்று நடந்துகொள்வதையே நான் கண்ணுற்றிருக்கிறேன். டின்னிட்டஸ் பிரச்சினைக்குப் பிறகே சீரான உணவுமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களுக்கான உணவுமுறையை நாங்களே வடிவமைத்துக்கொண்டோம். சைவ பேலியோவின் சில அம்சங்களை அதில் பார்க்கலாம். ஆனால், சீரான வாழ்க்கைமுறையும் அதிமுக்கியமானதே.  

"ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போனால் தமிழ்நாட்டில் பலருக்கும் தம் ரத்தவகை என்ன என்பதே தெரியாது. ஆக தம் ரத்தவகை என்ன என்பதே தெரியாமல் அதற்கு ஏற்ற உணவை எப்படி சாப்பிடமுடியும்? தற்போது மெடிக்கல் சோதனைகள் பரவலான காலத்தில் மட்டுமே இது சாத்தியம்." என்று தன்னுடைய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் செல்வன். உண்மைதான். நான் கூறவந்தது அதுவல்ல. "ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் என உடல்வகைக்கு ஏற்றாற்போல் தனிப்பட்ட உணவுமுறையையும், சிகிச்சையையும் பரிந்துரைப்பார்களே, அது போன்று மேனாட்டு மருத்துவத்தில் எதுவும் இல்லையா?" என்றுதான் என் கடிதம் கேள்வி எழுப்பியது. இரத்தவகை பற்றிய ஆராய்ச்சிகள் அதற்கு விடையாக அமையலாம் என்பதே என் கருத்து. இரத்தவகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வேண்டுமானால் ஒரு நூறு வருடங்கள்தான் ஆகியிருக்கும். ஆனால், பல ஆயிரம் வருடங்களாக நாடி பார்த்து நோய் நிலை அறியும் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்துள்ளதே. நாடி பார்த்து வாதம், பித்தம், கபம் போன்றவற்றின் இயக்கங்களை அறிந்துகொள்வது என்பது ஆய்வக சோதனைகளைப் போன்று எளிதானதுமில்லை.      

"கற்காலம் முதல் தற்போது வரை எல்லாரும் தாம் இருக்கும் பகுதிகளில் என்ன கிடைக்கிறதோ அதை உண்டு வாழ்ந்தவர்கள்தான்" என்று அவர் கூறியதில் நானும் முற்றிலும் உடன்படுகிறேன். ஆனால், "Agrarians are the first vegetarians" என்பதை அவர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடும். சைவம் என்றால் பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த, அதுவும் "சுத்த சைவம்" என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆசியாவிலோ அல்லது மத்திய ஆசியப் பகுதியிலோ ஏற்பட்ட சூழல் மாறுபாடுகளின் காரணமாக கி.மு 25000 மற்றும் கி.மு 15000 ஆண்டுகளுக்கு இடையே 'ஏ' இரத்தவகை தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார் டி'ஆடாமோ. அவர் குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது. பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் என்பதே சரியாக இருக்கும். வேட்டையாடித் திரிந்துகொண்டிருந்தவர்கள் ஒரு நிலையான இடத்தில் குடியேறி, கால்நடைகளை வளர்த்து, தாவரங்களைப் பயிரிட்டு, விளைந்ததை உண்டு வாழ்ந்து, நிரந்தர வாழ்க்கைக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். "பெரும்பாலும்" தங்கள் நிலத்தில் விளைந்ததை உண்டு வாழ்ந்தவர்கள் என்றால் அவர்களை முழுச் சைவர்கள் என்று பொருள்கொள்ளக்கூடாது. விவசாயமே அவர்களின் கலாச்சார அம்சமே அன்றி அகிம்சையல்ல. இன்றைய விவசாயிகளோடும் அவர்களை ஓரளவுக்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  

அவர்களுடைய வாழ்க்கை முறையில், குறிப்பாக உணவுமுறையில் ஏற்பட்ட பெருமளவு மாற்றத்தின் காரணமாக செரிமான அமைப்பிலும், நோய் எதிர்ப்பு அமைப்பிலும் உருவான திடீர்மாற்றத்தின் விளைவாகப் பிறந்ததுதான் இரத்தவகை 'ஏ'; இதன் மூலம் தானியங்களையும் இன்னபிற உணவுகளையும் உட்கிரகிக்கும் தன்மையை இந்த உடல் பெற்றிருக்கிறது என்று நிறுவுகிறார் டி'ஆடாமோ. எனவேதான் அவர்களுக்கு வேறுவகை உணவுமுறையைப் ( நியோலித்திக்?) பரிந்துரைக்கிறார். இரத்தவகை 'ஓ' வகையினருக்கு அவர் பரிந்துரைக்கும் உணவுமுறை கிட்டத்தட்ட 'பேலியோ' உணவுமுறையை ஒத்ததாக இருக்கிறது. இப்படி இரத்தவகைக்கு ஏற்ப ஒவ்வொரு வகையான உணவிலும், எவற்றை எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்று பட்டியலிட்டிருக்கிறார். அனைவருக்கும் பொதுவானதாக இல்லாமல், 'உடல்வகைக்கு ஏற்ற உணவு' என்கிற என்னுடைய கருதுகோளுக்கு இது ஒத்துப்போகிறது.    

இரத்தவகை உணவுமுறை பிழையானதாகவேகூட இருக்கலாம். எனக்குமே இது புதியதுதான். மேலும், என்னுடைய பேலியோ கடிதத்தில் கூறியதுபோல நான் இந்தத் துறையில் வல்லுநர் இல்லை. எனக்கிருப்பதெல்லாம் கேள்விகள் மட்டுமே. மற்றேனைய உணவுமுறைகளைப் போலவே இதையும் மெய்ப்பொருள் காணவிழையும் பொருட்டு சந்தேகக் கண்கொண்டே ஆராய்கிறேன். ஊட்டச்சத்து நூல்களை வாசித்துவிட்டு, நண்பர்கள் சிலருடன் விவாதித்து, FIT FOOD, SKIN FOOD, HEART FOOD, LIVER FOOD என்று பல்வேறு பட்டியல்களைப் போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து வந்தபோது, என்னுடைய நண்பர் ஆலின் "இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு நீ போட்டிருக்கும் பட்டியல்களை எல்லோருக்கும் பகிரலாமா வேண்டாமா என்று நீயே முடிவு எடுத்துக்கொள்." என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுரையில் தொனித்த அக்கறையையும் நியாயமும் என்னைச் சிந்திக்க வைத்தது. சக மனிதனின் மீதான அதே அக்கறையோடும், நியாயத்தோடும்தான் என்னுடைய அந்தக் கடிதம்  எழுதப்பட்டது. மேலும், புத்தகத்தைப் பரிந்துரை செய்தவருக்கு 52 வயது. ஆனால், அவர் என்னருகே நின்றால் நானும் அவரும் ஒத்த வயதுடையவர்களாகத் தெரியுமளவுக்கு தன் உடலை ஆரோக்கியத்துடன் பராமரித்து வருபவர். ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆனால் தினமும் சைக்கிளில்தான் அலுவலகத்துக்குச் செல்கிறார். அவருடைய பரிந்துரையில் விவேகம் இருக்கும் என்று தோன்றியதால் வாங்கிப் படித்தேன். 

ஒவ்வொரு வகையினரும் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று இந்தப் புத்தகம் பரிந்துரைப்பது அனுபவ ரீதியாக எனக்கு சரியென்று படுகிறது. என்னுடைய தந்தையார் யோகா பயிற்சியாளர் என்பதால் சிறு வயதிலிருந்தே பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து யோகா செய்யும் வழக்கம் எங்களுக்கு இருந்தது. அப்போதெல்லாம் அது ஒரு கொடுங்கனவுபோல் தோன்றினாலும், இன்றளவும் மூச்சுப் பயிற்சியையும், ஒரு சில யோகப் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்துவருவதற்கான அடித்தளத்தை அந்த நாட்கள் திடமாக அமைத்துக் கொடுத்திருக்கிறது. பெல்ஜியத்துக்கு வந்த பிறகு டாய்ச்சி வகுப்புகளுக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால், எனக்கு என்னவோ ஓடுவதிலும், நடப்பதிலும், உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வதிலும், யோகாவை விட களரிப் பயட்டு போன்ற தீவிர பயிற்சிகளிலும்தான் உற்சாகம் அதிகமாகக் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாமலிருந்தது. அதற்கு விடையளிக்கும் விதமாக, டி'ஆடாமோ 'ஓ' வகையினருக்கு உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், தற்காப்புக் கலை, ஓட்டம், போன்ற தீவிர பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறார். அவருடைய கூறுவதுபடிப் பார்த்தால் எனக்குள் இன்னமும் பேலியோலித்திக் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. ;-) இதற்கு நேர்மாறாக என் மனைவியோ பலமுறை உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினராகி, ஒரு மூன்று வாரம் சென்றுவிட்டுப் பின்பு தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றுவிட்டிருக்கிறாள். அவளுக்கு ஓடுவது, தீவிர உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைவிட, மெதுவாகச் செய்யும் பயிற்சிகளே தனக்கு ஏதுவாக இருப்பதாக உணர்கிறாள். டி'ஆடாமோ, 'ஏ' வகையினருக்கு யோகா, டாய்ச்சி போன்ற உடலை, மனதை அமைதிப்படுத்தும், மையப்படுத்தும் பயிற்சிகளே உகந்தது என்கிறார். கடைக்குட்டிகளான, 'பி' மற்றும் 'ஏபி' வகையினருக்கு நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், விளையாடுதல் போன்றவற்றுடன் யோகப் பயிற்சிகயையும் பரிந்துரைக்கிறார். அறிவியல் முழுமையாக அங்கீகரிக்காவிட்டாலும் உடற்பயிற்சிகள் பற்றி அவர் கூறியிருப்பதில் உண்மையிருக்கலாம் என்று என்னுடைய உள்ளுணர்வும், உடல் அனுபவமும் கூறுகிறது. 

இவற்றையெல்லாம் ஒரு பைபிளாக எடுத்துக்கொள்ளாமல், வழிகாட்டுதலாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். யாரையும் கேட்கத் தேவையில்லை. நம் உடலோடு உறவாடினாலே, உரையாடினாலே போதும், அது ஆயிரம் செய்திகள் சொல்லும். எது சரி, எது தவறு என்பதை அறிவுறுத்தும். அந்த விழிப்புணர்வு ஆதிமனிதர்களுக்கு இருந்திருக்கிறது. ஆனால், நமக்கு இல்லை. அவ்வளவே. இன்றைக்கு 'கீட்டோ', 'பேலியோ', 'தாவர உணவுமுறை' என்று எத்தனையோ வகையான உணவுமுறைகளைக் கொண்டுவந்து நம் முன்னால் கொட்டுகிறார்கள். நாளைக்கு இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு வேறொருவர் 'நியோலித்திக்' உணவுமுறையைக்  கொண்டுவரலாம். நான் பின்தொடர்ந்து வரும் மருத்துவர் எரிக் வேறு அண்மையில் தன் தரப்புக்கு, உடல் அமைப்புக்கு ஏற்ற உணவுமுறையை முன்வைக்கிறார். புத்தகமும் வெளிவந்துவிட்டது. அவர் கீட்டோ உணவுமுறைச்  சார்பாளர். இருந்தாலும் உடலமைப்பு சார்ந்து "தனிப்பட்ட" உணவுமுறை திட்டத்தின் அவசியத்தையும் பேசுகிறார். அவரைப் போன்ற வல்லுநர்கள் அனைவருமே அமைதியாகப் பேசுபவர்களே. ஆனால் பின்பற்றுபவர்களிடம்தான் சற்றுக் கவனமாக இருக்கவேண்டியிருக்கிறது. முன்னோடிகளுக்கும், வல்லுநர்களுக்கு இருந்த நோக்கமும் நியாயமும் இவர்களுக்கு இல்லாததே அதற்குக் காரணம். அலுவலகத்திலேயே என்னைச் சுற்றி அத்தனை உணவுமுறைகளைப் பின்பற்றி வருபவர்களும் இருக்கிறார்கள். மோடி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் உரையாடிக்கொண்டு இருக்கும்போது எப்படி அந்த இடத்தைவிட்டே தூர ஓடிவிட வேண்டுமோ, அதேபோல நானும் என் நண்பன் கூனும் [Koen] டயட்டர்ஸ் ஒன்றாகக் கூடுமிடங்களில் இருந்து 'ஸ்தானத்யாகேன துர்ஜனா' என்று ஓட்டம் பிடித்துவிடுவோம். தனிப்பட்ட முறையில் அவர்கள் நல்லவர்கள். ஆனால், ஒன்றாகக் கூடி உணவுமுறைகளைப் பற்றி அலசும் சமயங்களில் மட்டுமே அவர்களுக்குள் ஏனோ சற்று உக்கிரம் கூடிவிடுகிறது. சந்தேகம் இருந்தால் இந்தக் கட்டுரையை ஏதேனும் ஒரு பிரசித்தி பெற்ற உணவுமுறையைப் பின்பற்றி வருபவர்களிடம் காண்பித்துப் பாருங்கள். உணவுமுறை விஷயத்தில் நான் கூன் கட்சி. "Mijn dieet. Mijn gezonde verstand" என்று அவன் அழகாகச் சொல்லுவான். (அவ்வப்போது என்னிடமிருந்து தமிழ் வார்த்தைகளை கற்றுவருபவனாக இருந்தாலும் இந்தக் கட்டுரையை வாசிக்கும் அளவுக்கெல்லாம் அவன் தமிழறிவு வளர்ந்துவிடவில்லை. இதை அவனுக்கு காண்பிப்பதற்காக டச்சு மொழியில் எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும். ஆங்கிலத்தில்: "My diet. My common sense.")    

கீழ்வரும் வரிகள் விசிஷ்டாத்வைதம் பற்றிய கட்டுரை ஒன்றின் ஜெயமோகன் எழுதியவை : 

"பல்வேறு தத்துவதரிசனங்கள் இங்கே உள்ளன. ஆனால் அவற்றுக்கு இடையே உரையாடலே இல்லை. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மதமாக ஆகி தங்கள் தரப்பை மட்டுமே குருபரம்பரையாகக் கற்று அதையே நம்பிக்கொண்டு முன்செல்கிறது. வரலாற்று நோக்கே காணக்கிடைப்பதில்லை. ஒட்டுமொத்தப்பார்வை உருவாவதில்லை. ஆகவே விவாதங்கள் பரஸ்பர நிராகரிப்பாகவே நிகழ முடிகிறது. அவை விதண்டாவாதங்களாக ஆகி மனக்கசப்பை நோக்கிச் செல்கின்றன."

இந்த இடத்தில் "தத்துவ தரிசனங்களை" நீக்கி விட்டு "உணவுமுறைகள்" என்று மாற்றி, இனி வரப்போகும் உணவுமுறைகள் பற்றிய   என்னுடைய கட்டுரையில் இந்தப் பத்தியைச் சேர்த்துவிடலாம். 

உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். கடந்த வருடம் தாவர உணவுமுறையைப் பின்பற்றி வரும் என்னுடைய அலுவலக நண்பர் குகை மனிதர்களான நியாண்டர்தால்கள் எல்லாம் "தாவர போஜனிகள்" (சைவத்தை மதத்தோடு குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவ்வாறு பதங்களை உருவாக்கவேண்டியிருக்கிறது!) என்பது ஒரு ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியிருக்கிறது என்று ஒரு போடு போட்டார். செய்தியைத் தேடி வாசித்துப் பார்த்தால் நான் நினைத்தது போலவே அவர் கூறியது தவறுதான். ஆனாலும் அது முற்றிலும் தவறான செய்தியில்லை.        

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் "லாரா வெய்ரிச்" மற்றும் "ஆலன் கூப்பர்", இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் "கெய்த் டாப்னி" போன்ற பன்னாட்டு ஆராய்ச்சியாளர்களும், அவர்களுடைய உதவியாளர்களும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வாழ்ந்த மூன்று நியாண்டர்தால் இன மனிதர்களின் பற்காரைகளை ஆராய்ச்சி செய்துவந்திருக்கிறார்கள். அவற்றில் ஒரு நியாண்டர்தால் மனிதன், நான் வசிக்கும் பெல்ஜியம் நாட்டிலுள்ள 'ஸ்பா' என்கிற நகருக்கு அருகே உள்ள குகையிலும், மற்ற இரண்டு மனிதர்களை ஸ்பெயின் நாட்டிலுள்ள 'எல் சீட்ரோன்' குகையிலும் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

பெல்ஜிய ஸ்பா குகை : இங்கு 1886-ஆம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் பல நியாண்டர்தால் மனிதர்களின் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டாலும், அவற்றில் ஒன்று மட்டுமே ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது

ஸ்பானிய எல் சீட்ரோன் குகையில் 12 நியாண்டர்தால் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டச் சுரங்கப்பாதை

"பெல்ஜியம் தேசத்து" நியாண்டர்தால் மனிதர் பெரும்பாலும் மாமிச உணவை உட்கொண்டவர் என்றே ஆராய்ச்சி கூறுகிறது. ஆடுகளிலிருந்து காண்டாமிருகங்கள் வரை அத்தனையையும் வெளுத்துக் கட்டியிருக்கிறார் என்பதற்கு டி.என்.ஏ சான்றுகளைக் கண்டறிந்துள்ளார்கள். ஆனால், நம் "ஸ்பானிய" நியாண்டர்தால் மனிதரோ ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறார். அவருடைய பற்காரைகளைச் சோதித்துப் பார்த்ததில் மாமிச உணவு அருந்தியதற்கான டி.என்.ஏ தடயமே இல்லை என்றும், அவர்கள் பெரும்பாலும் காளான்கள், பைன் பருப்புகள், பாசி மற்றும் மரப்பட்டைகளை உண்டதற்கு மட்டுமேயான தடயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

இதை வாசிக்கும்போது, நல்லவேளை ஆதிமனிதன் 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்று பல் துலக்காமல் விட்டு வைத்தான். இல்லாவிட்டால் இதையெல்லாம் நாம் எப்படித் தெரிந்துகொள்வது. அதிலும் அந்த பெல்ஜியம் நியாண்டர்தால் மனிதரின்  பற்களின் புகைப்படங்களைப் பார்த்தால், அவை மிகுந்த ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருப்பதாகத் தெரிகிறது. பேசாமல் நானும் ஆதிமனிதனைப்போல பல் துலக்குவதை நிறுத்திவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். வருங்கால ஆராய்ச்சிகளுக்காவது உதவும். மேலும், குகை மனிதர்களின் வாழ்க்கைமுறையைப் பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கிறேன். என்னுடன் சேர்ந்துகொள்வதாக இருந்தால் தெரிவிக்கவும்.   

பெல்ஜிய ஸ்பா குகையில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதனின் முழுமையான தாடை; அதில் மெலிதாகப் படர்ந்திருந்த பற்காறைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு போதுமான அளவு டி.என்.ஏ தடயங்களை வழங்கியிருக்கிறது

இருநூறுக்கும் மேற்பட்ட நுண்ணுயிர் வகைகளை அவர்களுடைய பற்களில் கண்டறிந்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக ஒரு ஸ்பெயின் நியாண்டர்தால் இளைஞனின் தாடையில் இருந்த ஓட்டையை வைத்து அவனுக்குச்  சீழ்கட்டி இருந்திருக்கலாம் என்றும், மேலும் அவன் இரைப்பைக் குடல் அழற்சியாலும்  பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள். அவனுடைய பற்காரைகளில் உள்ள டி.என்.ஏ இன்னும் சில சுவாரசியமான தகவல்களையும் சொல்லியிருக்கிறது. சாலிசிலிக் அமிலத்தைக் கொண்டுள்ள போப்லர் மரப்பட்டைகளை அவன்  உட்கொண்டிருந்திருக்கிறான். சாலிசிலிக் அமிலம் ஆஸ்பிரினுக்கான இயற்கை மூலங்களில் ஒன்று என்பதை அறிவோம். அதுமட்டுமல்ல, அவனுடைய பற்களில் பென்சிலியம் இருந்ததற்கான சான்றுகளும் கிட்டியுள்ளது. வயிற்றுவலிக்கும், பல்வலிக்கும் ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளையும், சீழை ஏற்படுத்தும் தொற்றுகளுக்கு பென்சிலியம் போன்ற நோயுயிர்முறிகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவார்ந்தவர்களாக குகை மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு பிரமிப்பூட்டுகிறது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்பிரின் அறிவு! கேட்கவே சிலிர்ப்பாக இல்லை?  

ஸ்பானிய குகையில் கண்டெடுக்கப்பட்ட நோயுற்றிருந்த நியாண்டர்தால் சிறுவனின் பல்வரிசை; ஆஸ்பிரின், பென்சிலின், தடயங்கள் இதிலிருந்தே பெறப்பட்டன 

இந்த ஆராய்ச்சியில் முத்தாய்ப்பாக இன்னொரு செய்தி. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம்முடைய ஹோமோ சேப்பியன்ஸ் தாத்தாக்களின் பற்களிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்களில் ஒன்றையும் அந்த நியாண்டர்தால் இளைஞனின் பற்களில் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் நமக்கு பல் ஈறுகளில் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருப்பது இந்த நுண்ணுயிரிதான். நம் தாத்தாக்கள் அல்லது பாட்டிகள் அன்றைக்கே கலப்புத் திருமணம் புரிந்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறதல்லவா? எனவே, கலப்பினச் சேர்க்கை கோட்பாட்டை [Inter-breeding Theory] உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது இந்த ஆராய்ச்சி. 

இந்தக் கதை மட்டும் தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்குக் கிடைத்தால் என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தேன். அதுவும் மாற்றுக் கோட்பாட்டின்படி  [Replacement theory] நியாண்டதால் இன மனிதர்களை இனப்படுகொலை செய்து, நம் ஹோமோ சேப்பியன்ஸ் தாத்தாக்கள் எல்லாம் தாதாக்களாகவும் இருந்திருக்கும் பட்சத்தில், நிச்சயமாக தமிழ் திரைப்பட உலகுக்கு ஏற்றதொரு நல்ல கதை கிடைக்கும். ஹோமோ சேப்பியன்ஸ் பெண்ணும், நியாண்டர்தால் ஆணும் காதலித்து, குகைகளில் முத்தமிட்டு நுண்ணுயிரிகளைப் பரிமாறிக்கொண்டு, "பைன் கொட்டைப் பல்லழகி.." என்று டூயட் பாடலெல்லாம் பாடி, இருவரும் காளான்களைப் பொறுக்கித் தின்றபடி காதல் வார்த்தைகள் பேசி, இறுதியில் நாயகன் நான்கு ஹோமோ சேப்பியன்ஸ் அண்ணன்களையும் அவர்களுடைய அடியாட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு நாயகியைத் தூக்கிக்கொண்டு ஓடியிருப்பான். இடையே ஒரு தாத்தா நாட்டாமை வேலையும் பார்த்திருப்பார். 

ஸ்பானிய எல் சீட்ரோன் குகை மனிதர்கள் தாவரங்கள் மற்றும் காளான்களை உண்பதைக் காட்டும் விளக்கப்படம்

மானுட வரலாறு எத்தனை சுவாரசியங்களைத் தன்னகத்தே தாங்கி வந்திருக்கிறது. வரலாறு தெரியாமல் உயிரியல் பிரச்சினைகளைக்கூட  தீர்க்க முடியாது என்பதுவும் நன்றாகத் தெரிகிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று வாழ்பவர்கள் அதிக கலோரி உணவின்மீது இச்சை கொள்வதற்கு அடிப்படைக் காரணம்கூட நம் தாத்தா, பாட்டிகள் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு சாவன்னா புல்வெளிகளில் இனிப்பான பழங்களை அதிகம் உட்கொண்டதுதான் என்று நிரூபித்திருக்கிறார்கள். அதுபோலவே நம்முடைய ஒவ்வொரு உடல் சார்ந்த பிரச்னைக்கும், அவ்வளவு ஏன் ஸ்கீட்ஸோஃப்ரெனியா, ஆட்டிஸம் போன்ற உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்குக்கூட நம் முன்னோர்களைத் தொடர்ந்து சென்றால் தீர்வு கண்டுவிடலாம் என்று சொல்கிறார்கள். எனக்குக்கூட அக்ரோபோபியா என்று சொல்லக்கூடிய உயரம் சார்ந்த அச்சம் இருக்கிறது. அதிலிருந்து வெளிவருவதற்காக ஸ்கை-டைவ், பங்கி-ஜம்பிங் என்று அத்தனையும் முயன்று பார்த்துவிட்டேன். ஆனாலும் ஒரு பலனும் இல்லை. ஐபில் டவரின் உச்சியில் எடுத்த புகைப்படத்தில் என்னுடைய மனைவியின் கைகளை அச்சத்துடன் பிடித்துக்கொண்டு  நின்றுகொண்டிருப்பேன். அநேகமாக, நம்முடைய தாத்தா எவரோ ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு மலையுச்சியிலிருந்து விழுந்து நீண்டநாட்களுக்கு பித்துப் பிடித்தவராக வாழ்ந்திருக்கவேண்டும். அவர் இன்னும் அவருடைய அச்சத்தின் வடிவில் என்னுடைய மரபணுக்களில் வசித்துக்கொண்டு தொடைநடுக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இது வரலாறும், உயிரியலும், உளவியலும் இணையும் அழகானதொரு இடம். 

ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகருக்கு அருகேயுள்ள நியாண்டர்தால் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மறுகட்டமைக்கப்பட்ட நியாண்டர்தால் மனித உருவச்சிலை

நவீன யுக மனிதனைவிடவும் இயற்கையின் ரகசியங்களை நன்கு அறிந்திருந்த ஆதிமனிதனைத் தேடிப் போவது என்பது எனக்கு சுவாரசியமாகவே படுகிறது. இதனால்தான் எனக்கு தொல்லியலிலும், மூலக்கூற்று உயிரியலின் சாத்தியங்களை அறிந்துகொள்வதிலும் ஆவல் பெருகிக்கொண்டே போகிறது.அதே சமயம், இன்றைய வாழ்க்கைமுறையையும், கிடைக்கும்  உணவின் தரத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. உணவுமுறையைவிட தரமான உணவுப்பொருட்கள் கிடைப்பதற்குத்தான் வழிவகை செய்ய வேண்டும். எத்தனை வகையான மரபணு மாற்றப்பட்ட உணவுகள். "Thou shalt not let thy cattle gender with a diverse kind: thou shalt not sow thy field with mingled seed" என்கிற பைபிள் வாசகமெல்லாம் பகுத்தறிவுக்குத் தேவையில்லை போலும். 

அத்தனைக்கும் மேலாக, இந்த உடலின் நுண்ணறிவைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. வெளிப்புற மாற்றங்களுக்கேற்ப எதற்கும் தன்னை உட்புறம் தயார்படுத்திக் கொள்ளும் சக்திவாய்ந்தது இந்த உடல், எனவே காலப்போக்கில் நம் உடலில் ஏற்பட்ட திடீர்மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியம் என்றும் ஒருசாரார் கருதுகிறார்கள். நெருப்பைக் கண்டுபிடித்த மனிதன் தன் உணவை சுட்டுச் சாப்பிட ஆரம்பித்த பிறகே அவனுடைய வயிற்றின் அளவு சுருங்கி மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது அல்லவா? சூழலுக்கு ஏற்ப இதுபோன்ற மாற்றங்கள் தொடர்ந்து நம் உடலில் ஏற்பட்டு வருகிறது. 

இதைப் பற்றியெல்லாம் எழுதித் தீராது. இறுதியாக, இரண்டு பத்திகளுடன் "குறைவே நிறைவை" நிறைவு செய்வோம் -  

ஏதாவது ஒரு உணவுமுறையைப் பின்பற்றலாம். அச்சம்கொள்ளத்  தேவையில்லை. மற்றவர்களையும் அச்சுறுத்தத் தேவையில்லை.  என்னுடைய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தவுடன் ஓரிரு நண்பர்கள் என்னிடம் வந்து "என்னுடைய டயட் பிளானைக்" கேட்டார்கள். இன்னொருவர், தன்னுடைய நண்பர் அறிவுறுத்தியதால், கடந்த நான்கு வருடங்களாக 'ஆலிவ் எண்ணெய்' உபயோகித்து வந்திருக்கிறார். ஆலிவ் எண்ணெய் நல்லதுதான். ஆனால் அது இந்தியச் சமையலறைக்கு, குறிப்பாக தாளிப்பதற்கு நிச்சயம் உகந்ததல்ல. இது அச்சத்தின் விளைவாய் நேர்ந்த விபத்து. கார் வாங்குவதிலிருந்து, சலவைத்தூள் தேர்வு செய்வதிலிருந்து, நகை, உடை என்று நீண்டுத் தற்போது உணவுமுறை வரை வளர்ந்துவிட்டது இந்த "சமூக அழுத்தம்" எனும் கொடிய நோய். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரை ஒன்றில் வாசித்த செய்தியொன்று நினைவுக்கு வருகிறது. ஈடன் தோட்டத்தில் ஏவாளுக்கு ஆப்பிளை நுகர அறிவுறுத்தியவன் சாத்தான். அங்குதான் நுகர்பொருள் கலாச்சாரம் தொடங்கியது என்று வைத்துக்கொண்டோமானால், உலகத்தின் முதல் விற்பனையாளன் சாத்தான்தான். ஆதாம் ஏவாளின் ஆரம்பித்து, இன்றைக்குப் பெருகிவரும் பேய்த்தனமான நுகர்பொருள் கலாச்சாரத்தில் எந்த நுகர்பொருளை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு பத்து வகைகள் இருக்கின்றன. இங்கிருக்கும் பேரங்காடிகளில் பால், தயிர் என்று எதை வாங்கச் சென்றாலும் அவை அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளைக் கடந்து செல்லும்போது, சுயம்வரத்தில் பூமாலையை  கைகளில் ஏந்தியபடி ஓரக்கண்ணால் இருபுறங்களிலும் நோட்டம்விட்டுக்கொண்டே செல்லும் ஒரு இளவரசியாக என்னை உணர்ந்ததுண்டு. அருகே என்னை குழப்புவதற்கு என்றே எனக்குத் தோழியாக உடன் நடந்துவரும் என் மனைவி. சிறுவயதில் வீட்டுக்கு வண்ணம் தீட்டுவதற்காக என் தந்தையாருடன் வண்ணப்பூச்சு வாங்கச் சென்றால், கடையில் கிடைக்கும் மூன்று வர்ணங்களில் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து விடுவோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு என் மகனின் அறைக்குச் சாயம் வாங்கச் சென்றால் நீல நிறத்துக்கு மட்டுமே ஒரு பத்து பக்க கையேட்டைத் தருகிறார்கள். அதைப் புரட்டிவிட்டு குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்த என்னிடம் என் மனைவி, "நாம் வேண்டுமானால் ஹ்யூபோ கடைக்குப் போய்ப் பார்க்கலாமா?" என்று ஆர்வத்துடன் கேட்டதற்கு, "ஆளை விடுங்கள்" என்று என் கண்களுக்குத் தென்பட்ட வெண்சாம்பல் நிறப் பூச்சைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். இத்தகைய பரந்த தேர்வு தவறான முடிவுக்கு வழிவகுக்கும். பாரி ஷ்க்வார்ட்ஸின் "The Paradox of Choice: Why More is Less" என்கிற புத்தகம் நினைவுக்கு வருகிறது. வாங்கி வாசித்துப் பாருங்கள். நமக்கு வேண்டிய வண்ணத்தை தெரிவு செய்துகொள்ளலாம் என்கிற சுதந்திரம் இருந்தாலும், ஆயிரத்தில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நேர்வது என்பது மன அழுத்தத்தையும், உள்ளுக்குள் ஒருவித பக்கவாதத்தையும் ஏற்படுத்துகிறது. அதுவே ஷ்க்வார்ட்ஸ்  கூறும் முரண்புதிர். More is less. Less is more. போதுமென்ற மனம்  வேண்டும். நம்முடைய வட்டத்தை நாம்தான் வரைந்துகொள்ளவேண்டும். நமக்கு என்ன தேவை என்பதில் தெளிவு வந்த பிறகே தேர்ந்தெடுக்கச் செல்லவேண்டும். பல்பொடியோ, புத்தகமோ, உணவுமுறையோ எதுவாயினும்.  

ஏனெனில், உளவியல்ரீதியாக இத்தகைய அழுத்தங்கள் நல்லதற்கில்லை. அதுவும் சூழல் காரணமாக இன்றைய தலைமுறை எதற்கெடுத்தாலும் நடுக்கம்கொள்ளும் தலைமுறையாக மாறிவரும் நிலையில், அச்சுறுத்தல் மூலமாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது. முதலில் அந்த இயல்பை மாற்றவேண்டும். என்னுடைய பயிற்சிகளில் அதில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். நமக்குத் தேவையானதெல்லாம் அரவணைப்பு மட்டுமே. முந்தைய தலைமுறையை எடுத்துக்கொண்டால் அதில் வேறுவகையான சிக்கல் இருக்கிறது. அண்மையில் என்னுடைய பள்ளி நண்பன் ஒருவனின் தந்தை தன்னுடைய எழுபெத்தெட்டாவது வயதில் காலமாகிவிட்டார். அவனை அழைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு நிறைய உடல் உபாதைகள் இருந்ததால் உணவுக்கட்டுப்பாடு தேவை என்று பலமுறை அறிவுறுத்தியிருக்கிறான். அவர் கேட்கவில்லை போலிருக்கிறது. "வாழவேண்டிய வயதில் உண்பதற்கே எதுவுமில்லை. இப்போது சாகவேண்டிய வயதில் என்னடா உணவுக் கட்டுப்பாடு? போடா!" என்று கூறிவிட்டாராம். இதுதான் நிதர்சனம். இல்லாதவன் கற்கால மனிதனைப் போல எது கிடைத்தாலும் அது போதும் என்றிருக்கிறான். Not only ignorance, absence of choice too is bliss. இருக்கப்பட்டவனோ அதுவா, இதுவா என்று குழம்பித் தடுமாறுகிறான். That's the Paradox of Choice.   

கருத்துகள்

  1. விரிவான தகவல்களுக்கு நன்றி, பொறுமையாக வாசிக்க வேண்டும், செய்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..